Saturday 6 August 2016

பெருஞ்சுழி 50

உடல் விரித்துப் படுத்திருந்தான் அரிமாதரன். வெட்டுண்ட தழும்புகள்  அணி செய்வது போல உடல் முழுக்க பரவியிருந்தன. அரிமாதரன்  விழித்த போது  இரவில்  இசைத்த  பாணர்கள்  அனைவரும்  புறப்பட்டிருந்தனர். எழுந்த  கணத்தில்  அரிமாதரனுக்கு  சுயம் நினைவிலில்லை. தேர்தட்டில்  ஆதிரையை பார்த்து நிற்பதும் சவில்யம்  சுனதபாங்கம்  ஆநிலவாயில்  திருமீடம்  என நான்கு தேசங்களும்  இணைக்கப்பட்டு சுனதம் என்ற ஒற்றை தேசமாக  ஆக்கப்பட்டதும் அதன் தலைநகர்  சுனதபாங்கத்தில் சுனதன்  எரியூட்டப்பட்ட  எரிமேடையைச் சுற்றி அமைக்கப்பட்டதும் அவன் நினைவில்  எழுந்தன. மேற்கொண்டு அரிமாதரன்  சிந்திக்க விரும்பவில்லை.

ஆழி காதுகளை அறைந்து கொண்டிருந்தது. அரிமாதரன் ஆழியை நோக்கி  நடந்தான். அவன் அடிக்கடி  கண்டிருந்த சிற்பம் ஒன்று ஆழியின் அருகே ஒரு மண்டபத்தில்  அமைக்கப்பட்டிருந்தது. ஆறடி உயரத்தில்  நிமிர்ந்து அருள் வழியும்  விழிகளுடனும் ஆணவம்  மின்னும்  நகைப்புடனும் ஆதிரை நின்றிருக்க அவளுக்கு சற்று பின்னே அவளை விட உயரமும்  உடல் அகலமும் கொண்ட அரிமாதரனின் சிற்பம் ஒரு கையில்  மழுவுடனும் மறு கையில்  கதையுடனும் தோளில்  மாட்டிய வில்லுடனும் முறைத்து நின்றிருந்தது. அந்த சிற்பம்  போல தன் முகத்தை முறைப்புடன் வைத்துக் கொள்ள முயன்றான் அரிமாதரன். சிரிப்பு தான்  வந்தது.

பக்தியுடன்  அச்சிற்பத்தை  வணங்கிக் கொண்டிருந்த தோள் விரிந்த இளையவன்  ஒருவரின் "இளையவரே இவர்களை அறிவீரா?" என்றான் அரிமாதரன்.

சற்று திகைத்தவனாய் அரிமாதரனை பார்த்தவன் "இவர்களை அறியாதவர் ஆழிமாநாட்டில் இருக்க முடியுமா என்ன? இறை வடிவான சுனதரின்  ஆசி பெற்று ஆழிமாநாட்டை உய்விக்க பிறந்த பெருந்தாய் ஆதிரையும் அவர் வீரமைந்தன் அரிமாதரரும்" என்றவன் "ஆழிமாநாட்டை தன் வீரத்தாலும் அன்னையின்  விவேகத்தாலும் வென்றெடுத்தவர் அரிமாதரர். எட்டாண்டுகளுக்கு முன் வனம் புகுந்தார்  என்கின்றனர். அவர் உருவாக்கிய  நியதிகளால் ஆளப்படுகிறது ஆழிமாநாடு" என்றவன் மீண்டும்  சிற்பத்தை வணங்கி மீணடான்.

அவன் சென்றதும்  சில கணங்கள்  சிந்தித்த அரிமாதரன்  சிரிக்கத் தொடங்கினான். எண்பது  வயதுக்கு மேல்  இருக்கும்  அந்த முதியவன் சிரித்துக்  கொண்டே  ஆழி நோக்கிச்  செல்வதை சிலர் கண்டனர். அவன் சிரிப்பையும் உள்ளிழுத்துக்  கொண்டு அமைதியாக  கரையுடன்  பேசிக் கொண்டிருந்தது  ஆழி வழக்கம் போல்

(பெருஞ்சுழி  நூல்  ஒன்று நிறைவு)

Friday 5 August 2016

பெருஞ்சுழி 49

கருமை என்பது முடிவின்மை. மின்னல்களை ஒளித்து வைத்திருக்கும்  மேகங்களில் இளங்கருமை. தலைமுறைகளை விதைத்து வைத்திருக்கும் கருவறையின்  அடர்கருமை. பேரழகை காட்டி நிற்கிறது இவளின் மென்கருமை. நெளியும்  நீள் நாகங்களென சுழல்கின்றன கரங்கள். அசையா நெடுநீள் விழிகளில் அவற்றின்  மேலெழுந்த புருவங்களில் கரும்பளிங்கென மின்னும்  நெற்றியில் நில்லாது வழிகிறது அவளழகு.

மோதிச் சிதறும் சிரங்கள்  வழிந்தொழுகும் வெங்குருதி பிளிறிச் சரியும் களிறுகள் விண் நோக்கி கால் தூக்கி இறக்கும் புரவிகள் அனைத்தையும்  நோக்கும்  அவ்விழிகள்  அக்கணமே அனைத்தையும்  நோக்காது நகர்கின்றன. நடுங்காதவளே நலுங்காதவளே உன் முன் களம் நிற்கவே பிறந்தவன் என்றுணர்கிறேன். புணர்தல் மட்டுமல்ல போரிடுதலும் முழுமையே. வா ஒன்றிணைவோம். பிறிதிலாதாவோம். என் விழிகள் கூர்மை கொள்கின்றன. சீராக எழுந்தமையும் முலைகள்  இதழ் மேல்  பூத்து நிற்கும்  வியர்வை  முத்துக்கள்  சற்றும்  அசையா உதடுகள்  அதரங்களை தொட்டுச் செல்லும்  சுருள் குழல்கள் கருநாகங்களென விரைத்து நெளியும்  நீள் கரங்கள்  மரமென மண் ஊன்றிய பாதங்கள். ஒவ்வொரு  அசைவிலும்  உயிர் பறிக்கிறாய். பெற்று முலையூட்டி வளர்க்கும் அன்னையர் ஆயிரம்  உண்டடி இங்கு. நீ கொன்று குளிர்விக்கிறாய். நாணில் எழும்  சிறு அதிர்வே எதிர் நிற்கும்  உயிரா உனக்கு? 

அன்னையே! அங்கங்கள் ஒவ்வொன்றும்  கூர்மை கொண்டு துடிக்க அவ்விழிகள் சொல்வதென்னடி. தகப்பனை தூக்கச் சொல்லி சிறு கைகள் உயர்த்தும் பேதையின் விழிகள். துள்ளி விளையாடி தாயை துடிக்க வைக்கும்  பெதும்பையின் விழிகள். மலர்ச்சியில் குளிரும்  மங்கையின் விழிகள். அனைத்தையும்  புரக்கும் அன்னையின்  விழிகள். அசையா நீள் விழிகள்! அசையா நீள் விழிகள்! நாகத்தின்  இமையா தீ விழிகள்! உன் விழிகள் திரைச்சீலை. என் வண்ணங்களை  ஊற்றி ஊற்றி வரைந்த பின்னும்  எஞ்சி நிற்கிறது வெண்மை. அனைத்து வண்ணங்களையும் உண்டு மின்னுகிறது உன் கருமை. சிற்றுதட்டின் பூமயிர் பரவலில் விழிகளின் அடியில் துடிக்கும்  சிறு குழந்தையின் ஆர்வத்தில்.

தேவி! போதுமடி. மஞ்சத்தில்  அல்ல களத்தில்  உன்னை காண்பவனே பேறு பெற்றவன். எத்தனை நேரம் என் சிற்றிதயம் தாங்கும் உன் பேரழகை.சிறு மகவாய் என் மடி தவழ்ந்தவள். மஞ்சத்தில்  மணம் பரப்பியவள். பெற்றெடுத்து அமுதூட்டியவள். இறக்கும்  நேரத்தில்  என் கரம் பற்றி கண்ணீர்  உகுத்தவள். எல்லா பிறவிகளிலும் எனைத் தொடர்ந்தவளே. நானென நான்  உணர்ந்ததனைத்தும் உன்னைத்தான். நாளென என்னைச் சூழ்ந்தவளும் நீதான். நீ மென்மழைத்தூரல் தீராப்பெரும்பசி உடல் களைக்கையில் உயிர் கவ்வும்  நல்லுறக்கம் சிந்தை அற்ற நேரத்தில்  சித்தம்  நிறைக்கும்  சிரிப்பு பயில்கையில் எழும் மகிழ்ச்சி  உழைப்பில் எழும்  வியர்வை தித்திப்பாக மனதில்  எஞ்சும்  தேன் கசக்கும்  கொடுநஞ்சு நாகத்தின்  பளபளப்பு மழையில்  முளைத்த மென் மணல் தடம் விழவுகளில் துடிப்பு இறப்புகளில் துயர் இன்மையின் எண்ணம். என்னவளே இத்தனை  ஆயுதங்கள்  வழி நான் தேடியது உன்னைத்தான். இயற்கை  உனக்குள் ஊற்றிய கனிவனைத்தையும் மகவென ஈன்றாய். நீ உனக்குள் வளர்த்த துணிவனைத்தையும் அம்பென கூரென விரைவென என்னுள் செலுத்து.

எனை ஈன்ற பெருங்கருணையே உனை நோக்கி அம்பெய்துகிறேன். அமுதூட்டிய கனிவே என் அம்பு பட்டு வழிகிறது குருதி. உன் உடல் வழியும்  குருதியெல்லாம் என் மகவுகள். உன்னிலிருந்து நான்  பிறப்பிக்காத என் மகவுகள். வீழாது!கனிவு ஒரு நாளும்  வீழாது. கருணை ஒரு நாளும்  வீழாது. அறம் ஒரு நாளும் வீழாது.

இனியவளே! வீழ்த்து! எஞ்சவிடாமல் ஏதுமில்லாமல் எனை வீழ்த்து!மழைத்துளிகள் என என் மார்பில்  தெறிக்கின்றன உன் அம்புகள். இதோ! உன் இதழ் என எனை நோக்கி  வருகிறதொரு பிறைச்சந்திர அம்பு. முத்தம் முத்தம்  என் முழுக்கழுத்திலும் உன் முத்தம்.

தேர்தட்டில்  தெறித்து விழுந்த வன்தோளனின்  சிரத்தை  பார்த்தான் அரிமாதரன். ஆதிரையை நோக்கி  அவன் முகம்  திரும்பியது. அவள் மொத்த உடலிலும்  என்றும்  இல்லாத  கனிவு வழிந்தது. அன்னையின்  முகம்  கண்டு ஒரு கணம்  நெஞ்சம் மலர்ந்தான் அரிமாதரன். அக்கனிவை ஒரு நாள்  கூட தான்  கண்டதில்லை  என்ற எண்ணம்  எழுந்ததும் எல்லா வழிகளிலும்  அக்குழந்தையின்  நெஞ்சம் அணைந்து போனது. அக்கணம்  அவனை  நோக்கித் திரும்பினாள் ஆதிரை. தீச்சுட்டு சுருங்கும்  மலரென அவள் முகம்  கூம்பியது. அரிமாதரன்  உடலில்  பற்றி எரியும்  அருவருப்பினை உணர்ந்தான்.

"ஆழிமாநாட்டின்  பேரரசி  வன்தோளன்  சிரம் கொய்த கொற்றவை  திருநிறைச் செல்வி வெற்றிச் செல்வி ஆதிரையின் புகழ் எங்கும்  நிறைக! அன்னையின்  வீரம் என்றும்  திகழ்க! அறம் ஓங்குக!" என்றெழுந்தது ஒரு குரல்.

பல்லாயிரம்  ஆர்ப்பரிக்கும்  குரல்களுக்குள் தன் கசப்பு காணாமல்  ஆவதை அரிமாதரன்  உணர்ந்தான்.

Thursday 4 August 2016

பெருஞ்சுழி 48

புலரியின் முதற்கதிர் மண்ணை அடைந்தபோது புகிந்தத்தின்  அரண்மனையைச் சூழ்ந்து கூடாரம்  அமைத்திருந்த வன்தோளனின்  படைகளுக்கு  அவர்கள்  சுற்றி வளைக்கப்பட்டிருந்தது புரிந்தது. கணபாரரை வன்தோளன்  பெருமிதத்துடன்  உணர்ந்தான். சவில்யத்தின்  பிரதானப்படை முழுவதையும் புகிந்தத்தின்  கிழக்கில்  விரிந்திருந்த ஆழியை நோக்கி அனுப்பிவிட்டு அங்கிருந்து படைகளின் ஒரு பகுதியை சதுப்புக்காடுகள் வழியாக மேற்கே பொட்டல்  நோக்கி அனுப்பியிருந்தார் கணபாரர்.

ஆதிரை வடக்கிலிருந்து  முக்கூட்டு  நாடுகளின்  படைகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தாள். கழுகு போல் சிறகு விரித்து சவில்யத்தை சூழும்  வியூகம்  அமைத்திருந்தான் வன்தோளன். மூன்று பக்கமும்  நாகங்களால் வளைக்கப்பட்ட  கழுகென நடுவில்  நின்றது வன்தோளனின் படை.

வன்தோளன்  அடிபணிந்தால் அவன் நாடு அவனுக்கு  திருப்பி அளிக்கப்படும்  என சவில்யத்தின்  அமைச்சகம்  தூது அனுப்பியது. தூதுவன்  கோட்டையை  அடைந்த அரை நாழிகை நேரத்தில்  புகிந்தத்தின்  அரண்மனையில்  சுனதபாங்கத்தின்  வெண்ணலை கொடி ஏறியது. செந்நிறமான எரியம்பு எழுந்ததும்  வீரர்களின் ஆர்ப்பரிக்கும் ஒலி மூன்று பக்கங்களில்  இருந்தும்  நெருங்கிக் கொண்டிருந்த சவில்யத்தின்  படைகளில்  தெளிவாகக் கேட்டது. தின்பண்டங்கள்  நோக்கி ஓடும் சிறுவன்  என திடீர்  விரைவு கொண்டன சவில்யத்தின்  படைகள். கோட்டையை  சூழ்ந்து  அமைக்கப்பட்ட எரி அரணை கணபாரர்  எதிர்பார்த்திருக்கவில்லை. மூன்று நாழிகைக்குள் எரியரண் அமைக்கப்பட்டிருந்தது. மூன்றடி ஆழத்தில் இரண்டடி அகலத்தில் அரண்மனையைச் சூழ்ந்து  வட்டமான கடவு தோண்டப்பட்டிருந்தது. உலர் மரங்கள் இலுப்பை எண்ணை ஊற்றி  தயார்  நிலையில்  இருந்தன. சவில்யத்தின்  படைகள் அரண்மனையை நெருங்கும்  வரை எரி அரணை கவனிக்கவில்லை. எரியம்புகள்  பாய்ந்து எரியரணில் நெருப்பு  எழுந்து புகை பரவியபோது விரைந்து நெருங்கிய  புரவிகளின் சீர் குலைந்தது. கோட்டை மதிலில் எழுந்த வன்தோளனின் வில்லாளிகள் நெருக்கமாக  அம்புகளை எய்தனர்.

குதிரைகளின் அலறல்  ஒலியும் வீரர்களின் அலறல் ஒலியும் இணைந்து எழுந்தது. புகை சூழ்ந்த பகுதியிலிருந்து சவில்யத்தின்  வீரர்கள்  எய்த அம்புகள் மதிலில் இருந்தவர்களை  சென்று தொட முடியவில்லை. சவில்யத்தின்  படைகள்  பின் வாங்குவது தெரிந்ததும்  விரிந்து பரவியது வன்தோளனின்  சேனை. நேர் களத்திற்கு சவில்யத்தின்  படைகள்  நகருமாறு செய்தான் வன்தோளன்.

பின் மதியத்தில்  போர் உக்கிரம்  அடைந்தது. சவில்யத்தின்  படை சமநிலை  இழக்காமல்  போரிட்டது. சுனதபாங்கத்தின்  வீரர்கள்  விரைவையே தங்கள்  ஆயுதம்  எனக் கொண்டிருந்தனர். இரு குதிரைகள்  பூட்டிய  விரைவுத் தேரில்  ஆதிரை களத்தின்  எல்லா பக்கங்களையும்  நிறைத்தாள். நடுங்கும்  விழிகளுடன்  அவள் போர் புரிவதை பார்த்திருந்தான் அரிமாதரன். எடை குறைந்த இரு நீளமான  வாட்களை உறுவினாள் ஆதிரை. மழைச்சரடென அவ்வாட்கள் தீண்டிய இடமெங்கும் செந்நீர்  கொப்பளித்தது. மலைகளை மோதும் பெருங்காற்றென மாறினான் வன்தோளன். அவன் கதையில்  அறைபட்டு இறப்பவர்களின்  ஓலம்  அப்பெரும் போர் களத்தில்  தனியே கேட்டது. ஆழியில்  பெய்யும்  மென் மழையின் அமைதியுடன்  கொலை புரிந்தாள்  ஆதிரை.

ஆதிரை கணபாரரை ஓர விழிகளால்  கண்டபோது அவர் பொறுமை இழந்திருப்பது தெரிந்தது. தளபதியின்  கூர் நோக்கும்  படபடப்பும் அப்போதைக்கு அவசியம்  இல்லையென முடிவெடுத்தார். இமையா விழிகளுடன்  இரு கைகளிலும் ஏந்திய கதையுடன்  தேர்தட்டினை விட்டு குதித்தார்  கணபாரர். மார்பில்  பாய்ந்த அம்புகளை ஒடித்து எரிந்தவராய் முக்கூட்டு நாடுகளின்  ஒவ்வொரு  உபதளபதியின் தேரின் சக்கரங்களையும் அடித்து உடைத்தார். மயிர் பற்றி அவர்களை தரையில்  குப்புற இழுத்துப்போட்டு முதுகெலும்பை உடைத்தார். அவர்கள்  அலறும் ஒலியை அவர்களின்  வீரர்கள்  தெளிவாகவே கேட்டனர். ஈரம் சொட்டும்  துணியென உடல் குலைந்த அவர்களை கையால் தூக்கி அவர்கள் வழிநடத்திய வீரர்கள்  நடுவே தூக்கி எறிந்தார். தன் வீரர்களின் உறுதி குலைவதை வன்தோளன்  கண்டான். கதையினை வீசிவிட்டு  மீண்டும் வில்லினை எடுத்தான். பன்மடங்கு விரைவு கூடியிருந்தது  அவன் வில்லில். கணபாரர்  அவன் இலக்கானார். எதிர்பட்ட யாவரும்  வெறும் தடைகளாக மட்டுமே  அவன் கண்ணுக்குத் தெரிந்தனர். விரைவு கூடிய போது புலன்கள்  நுணுக்கம் பெற்றன. பின் வாங்கியது போல் தெரிந்த வன்தோளனின்  படைகள்  முன்னேறின. இறந்த வீரர்களின் மீது தேர்ச்சக்கரங்கள் ஏறி இறங்கியதால் சேற்றுக் குழிகள்  போல் குருதி  வழுக்கியது.

கணபாரரை மண்ணில்  தெறிக்கச் செய்தான்  வன்தோளன். இடைவெளியின்றி  அவர் உடல்  முழுக்க  அம்புகளால்  நிறைத்தான். அத்தனை அம்புகளையும் ஏந்தியவாறே  அவனை நோக்கி  கதை சுழற்றி நெருங்கினார் கணபாரர்.

"கோடி முறை முயன்றாலும் நிலத்தை வெல்ல காட்டினால் முடியாது  மூடனே" என்றவாறு அவன் எய்த அம்பு கணபாரரின்  தோளில்  தைத்தது.

"அன்னையே" என வெறி கொண்டு கூவியவராய் வன்தோளனின் தேரில்  பூட்டியிருந்த  குதிரைகளின்  கால்களை உடைத்தார். அவன் தேரினை உடைத்து  தெறிக்கச்  செய்து அவர் நிமிர்ந்த போது தன் கண்ணெதிரே  ஒரு கதை எழுவதை கண்டார்.

அடுத்த கணம்  முட்டை  உடைவது போல் கணபாரர்  மண்டை சிதறி தரையில்  விழுவதை ஆதிரை கண்டாள்.

Wednesday 3 August 2016

பெருஞ்சுழி 47

முதல் நாள் அந்தியில் போர் முரசம் முழங்கியபோது முக்கூட்டு  நாடுகளின் மையப்படை  சவில்யம் நோக்கி முன்னேறி இருந்தது.

இரண்டாம்  நாள்  வன்தோளனை மேலும்  முன்னேற விடாமல்  தடுத்து வைக்க மட்டுமே சவில்யத்தின்  படையினரால்  முடிந்தது. மூன்றாம்  நாள்  போர் தொடங்கியதும் வன்தோளன்  தன் அத்தனை  தளைகளையும் அறுத்தெறிந்தவனாக போரிட்டான். சுனதபாங்கத்தின் காவல் படைகளில்  இருந்தும்  கிராமங்களில்  இருந்தும்  புதிதாக  வீரர்கள்  வந்தவண்ணமே இருந்தனர். மூன்றாம்  நாள்  போரில்  வன்தோளன்  சவில்யத்தின்  எல்லைக் கோட்டையை தகர்த்தான்.

"வணிக மன்றுகள்  அனைத்திற்கும்  தீ வையுங்கள். சவில்யம் இனி இறந்தவர்களின்  நாடாகவே எஞ்ச வேண்டும்" என ஆணையிட்டான் வன்தோளன்.  வெறி கொண்டு சூறையாடினர் சுனதபாங்கத்தின்  வீரர்கள் . ஆதிரை  புகிந்தத்தை கை விட்டு பின் நோக்கி  நகர்ந்தாள். கணபாரர்  வன்தோளனை  மேலு‌ம்  முன்னேற  விடாமல்  தடுத்துக் கொண்டிருந்தார்.

ஆநிலவாயிலின் தளபதி  அமதிரன்  "நாம் ஏன் இன்னமும்  இந்நகரில்  காத்திருக்க வேண்டும்  வன்தோளரே. முன்னேறிச் சென்று அவள் படைகளை சிதறடிக்க  நம் படைகளால்  முடியாதா என்ன?" என்று கேட்டான். வெற்றியில்  சமநிலை இழக்கும்  எளியவன் என்பதற்கு மேல் வன்தோளன்  அவனுக்கு  எந்த முக்கியத்துவமும் அளித்ததில்லை என்றாலும் "சவில்யம் ஆழியால்  வளைக்கப்பட்ட தேசம்  அமதிரா. நாவாய்கள்  கட்டுவதில்  சவில்யர்கள் வல்லவர்கள். நாம் முன்னேறினால் நாவாய்களில் ஏறி தப்பித்து விடுவார்கள். நம்முடைய  ஆட்சி அமைந்த பின் கடல் வழியாகவே  மீண்டும்  மீண்டும்  நம்மை தாக்கிக் கொண்டிருப்பார்கள். வென்றும் நிலையான  ஆட்சி  அமைக்க முடியாமல்  போகும். ஆகவே ஆதிரையையும் அவள் படைகளையும்   முப்பக்கமும் சூழ்ந்து  தேய்த்து அழித்த பின்னரே அரியணை அமர்வேன்" என்றான் வன்தோளன்.

இரு நாழிகைகளாவது துயில வேண்டும்  என்ற எண்ணம்  வன்தோளனுக்கு ஏற்பட்டது. மேலு‌ம்  வெற்றியின்  நடுவில்  கொள்ளும்  உறக்கம் முழுவது‌ம்  தன்னை மீட்டுக்  கொள்ள உதவும்  என்று  எண்ணினான். ஆதிரை இவ்வளவு  விரைவாக  பின் வாங்கி விடுவாள் என அவன் எண்ணியிருக்கவில்லை. கணபாரரும்  தன்னை சமாளிக்க  முடியாமல்  திணறுவதால் அவர் மேலும் வன்தோளனுக்கு மெல்லிய  கசப்புணர்வு  எழுந்திருந்தது. காமிலரை அவன் எண்ணிக்  கொண்டான். ஆதிரை  தன்னை நோக்கி முன்னேறாமல் காமிலரை நோக்கி நகர்ந்த போதே அவள் அஞ்சிவிட்டாள் என எண்ணினான். அகல்யையும்  விகந்தரும்  கண் முன் வந்த போது  தன்னை ஈன்றவர்கள் இறந்ததை அப்போது  தான்  அவன் சித்தம்  தொட்டறிந்தது. அகல்யைக்கு இழைக்கப்பட்ட  துன்பங்கள்  மட்டுமே  தன்னுடல் எனத் தோன்றியது  அவனுக்கு. தன்னுடைய  வெற்றிகளை பரத்தையருடன் மட்டுமே  பகிர்ந்து கொள்ள முடியும்  எண்றெண்ணிய போது அவன் கண்கள்  வழிந்தன. பின் அதையே கற்பனை செய்யத் தொடங்கினான். தன் வெற்றியை வியந்து தன்னுடன் உறவாடப் போகும்  அத்தனை  பெண்களின்  விழிகளிலும் இறுதியில்  எஞ்சி நிற்கப் போகும்  ஏளனத்தை அவன் மூடிய விழிகளில்  தெளிவாகக் கண்டன. ஏளனமாக நோக்கும்  அப்பெண்களை எப்படியெல்லாம்  துன்புறுத்துவது என கற்பனை செய்யத் தொடங்கினான். வெற்றுடலுடன்  நிறுத்தி ஒரு பெண்ணை சவுக்கால்  அடித்துக் கொண்டிருந்தான். வெள்ளையான அவள் முதுகில்  கசை உருவாக்கிய ஆழமான  செவ்வரித் தடங்களில்  இருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது. அறை மூலையில்  ஒன்றிக்கொண்டு நின்ற அப்பெண்ணின் உடல் நடுங்கியது. அவளை எங்கோ கண்ட நினைவு மீளவே எழுந்து சென்று  அவள் தலைமயிரை பற்றி இழுத்து முகத்தை  நோக்கினான். கண்களில்  நீர்  வழிய கூப்பிய  கைகளுடன்  அவன் முன் நின்றிருந்தாள்  அகல்யை. வன்தோளன்  திடுக்கிட்டு விழித்துக்  கொண்டான். இரு வயதில்  அவன் அன்னையை பிரிந்து குருகுலம்  சென்றபோது அவன் எந்த துக்கத்தையும்  உணரவில்லை. மற்ற மாணவர்கள்  அழுவது கூட அவனுக்கு  சிரிப்பையே வரவழைத்தது. மறுநாள்  காலை எழுந்த போதே அகல்யை  தன்னருகே  இல்லையென்பதை உணர்ந்தான். இரு வயதில்  உணர்ந்த அதே தனிமையை இறுக்கத்தை பயத்தை வன்தோளன்  புகிந்தத்தின்  அரண்மனையில் உணர்ந்தான்.

உப்பரிகையிலிருந்து  வெளியே பார்த்தான். வீரர்கள் எரி வட்டம்  அமைத்து ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தனர். நிமிர்வும் தெளிவும் இல்லாத  வன்தோளனை  அவர்கள்  கண்டதில்லை. ஒருவேளை  இப்போது  தன்னை காண நேர்ந்தால்  அவர்கள்  தன்னைக் கொல்லவும் வாய்ப்பிருக்கிறது என்றெண்ணிக் கொண்டான்  வன்தோளன். திடீரென  அவ்வெண்ணம்  அவனை அடைந்தது. ஆதிரை காமிலரை கொன்றதன் காரணம். சுனதபாங்கத்தின்  உபதளபதியான கோரிதமணை அழைத்தான்  வன்தோளன். காமிலர்  இறந்த துக்கம்  அவன் முகத்தில்  பிரதிபலித்தது. அச்சமயம்  அவன் தன்னை ஆழமாக  வெறுப்பான் என வன்தோளன் உணர்ந்தான். அவன் முகத்தில்  காமிலர் குறித்தோ விகந்தர்  குறித்தோ எந்த குழப்பமும்  இல்லை  என்பதை கோரிதமண் அறிவான்.

"இவ்வரண்மனையிலிருந்து ஆழி எவ்வளவு  தூரத்தில்  இருக்கிறது?" என்றான் வன்தோளன்.

"கிழக்கே மூன்று  காத தூரம் இளவரசே" என்றவன் அனைத்தையும் உணர்ந்தவனாய் "மேலு‌ம்  புகிந்தத்தை  கடக்காமல் நாற்பது  காத தூரம்  பயணித்தால்  நம் கண்ணில்  படாமல் சதுப்பு காடுகளை கடந்து மேற்கே விரிந்த பொட்டலை அடைய முடியும்" என்றான்  பதற்றத்துடன்.

வன்தோளன்  முகம்  அமைதி அடைந்தது.

"போர் நாளை தான்  தொடங்குகிறது" என்றான் வன்தோளன்  தனக்குள்ளாகவே சிறுவனுக்குரிய உற்சாகத்துடன்.

Tuesday 2 August 2016

பெருஞ்சுழி 46

முரசொலிப்பதற்காக இரு பக்க வீரர்களும் செவி கூர்ந்திருந்தனர். முதல்  நிலையில்  இருந்தவர்கள்  தங்கள்  உயிர் பிரிந்து விடக் கூடாது  என்ற எண்ணம்  மட்டும்  கொண்டவர்களாக அடுத்த நிலை போர் வீரர்கள்  தங்கள்  வீரம் வெளிப்படுவதை தங்கள்  தளபதிகள் பார்க்க  வேண்டும்  என்ற கவலை கொண்டவர்களாக அதற்கு  அடுத்த நிலை குதிரை வீரர்கள்  ஆர்வம்  மிகுந்த விழிகளுடன்  போரினை எதிர்பார்ப்பவர்களாகவும் இருந்தனர். போர் முரசங்கள் கொலை தெய்வமென நா சுழற்றி அமர்ந்நிருந்தன.

காமிலரை திரும்பி  நோக்காமல் முரசறைபவனுக்கு கை காட்டினான் வன்தோளன். திடுக்கிட்டுத் திரும்பிய காமிலர் அவனை தடுத்துவிட்டு "இளவரசே" என அதிர்ச்சியும் கடுமையும் கலந்த குரலில் அவனை நோக்கினார். "நீள்வில்" என்று சேவகனிடம் பணித்தான். அவனை விட இரு மடங்கு  உயரமிருந்த வில்லினை நேராக  நிற்க வைத்து எரியம்பு பொறுத்தி  விகந்தரும் அகல்யையும் பிணைக்கப்பட்ட எறிபொறியை குறி வைத்தான். " இளவரசே ! என்ன செய்ய இருக்கிறீர்கள்? " என அவன்  கைகளை பற்றிக் கொண்டார்  காமிலர். "எரிந்து நம் முன்  வந்து விழுவதை விட எறிபொறியிலேயே அவர்கள்  சிதையேறட்டும். முதியவர்களை  காட்டி என்னை தடுத்து விட நினைக்கிறாளா சிறுமி?" என சினத்துடன் காமிலரின் கையை தட்டி விட்டான்  வன்தோளன்.

தாழ்ந்த குரலில் "இளவரசே நம் படைகளின்  பெரும்பகுதி  இன்னமும்  மன்னரின்  கட்டுப்பாட்டிலேயே உள்ளன. மேலும்  தங்களை  தாயுடன்  இணைத்தே புரிந்து  கொண்டிருக்கின்றனர்  நம் வீரர்கள். இப்போது  அவர்களை ஆதிரை கொன்றாலும் நீங்கள்  கொன்றாலும்  அது நம் வீரர்களை  சோர்வுறச் செய்யும். அவள் இன்னமும்  மன்னரைக் கொல்ல ஆணையிடாததன் மூலம்  அவள் அமைதியை விரும்புகிறாள் எனத் தெரிகிறது. நம் படைபலத்தை சவில்யம்  அஞ்சுவதற்கு இதுவே சான்று. நம் தூது எழட்டும்" என்றார்  காமிலர்.

வன்தோளன்  தளர்ந்து  தேர்தட்டில்  அமர்ந்தான். "போர் வீரர்களாலும் தளபதிகளாலும்  நடத்தப்படுவதாக எண்ணுவது ஒரு மாயை இளவரசே. போர் என்றும்  உத்திகளாலும் தருணங்களாலுமே முடிவு செய்யப்படுகிறது. உண்மையில்  தன் ண
தருணத்தில்  ஆதிரை  வீணடிக்கிறாள் என்றே தோன்றுகிறது" என்றார் காமிலர்.பின்  கொம்பொலிகள் எழுந்தன. எதிர் திசையிலும் கொம்பொலிகள்  எழவே போர் தற்காலிகமாக நின்றது.

இரு புறங்களில்  இருந்தும்  தூதர்கள்  கொடியுடன் களமையத்திற்கு வந்தனர். தூதுவர்கள்  திரும்பியதும்  விகந்தரும்  அகல்யையும்  எறிபொறிகளில்  இருந்து இறக்கப்பட்டனர்.  வன்தோளனின்  படைகள்  மெல்ல மெல்ல  பின் வாங்க ஆணையிடப்பட்டன. கலைந்த ஒலிகளுடன் வீரர்கள்  பின் வாங்கிச் சென்றனர். வன்தோளன்  ஏதோ தவறு நடப்பதாக  எண்ணிக் கொண்டிருக்கும்  போதே  மீண்டும்  எறிபொறிகள்  நிமிர்ந்தன. எரிந்தவாறே விகந்தரும்  அகல்யையும்  அவனெதிரே வந்து  விழுந்தனர். அந்நிகழ்வை கண்டு சிரிப்பது போல சவில்யத்தின்  முரசு முழங்கத் தொடங்கியது. கணநேரத்தில்  வன்தோளன்  தன்னை மீட்டுக்  கொண்டு பின் வாங்கினான். தன்னுள்  மகிழ்ச்சி  பரவுவது  ஏன் என எண்ணி வியந்தான்.  "சுழற்போர் அணிவகுப்பு" என கூவியவண்ணம் வாளினை உறுவியவாறே வன்தோளன்  பின் வாங்கினான். பாறை வளைவுகளில்  மோதித் திரும்பும்  ஆறென மொத்த படையும்  சுழன்று திரும்பியது. புற்றிலிருந்து எழும்  நாகங்களென சவில்யத்தின்  படைகளை  அவர்கள்  வளைத்து சூழ்ந்தனர். பக்கவாட்டில்  போர் புரிய அறிந்திராத சவில்யத்தின்  வீரர்கள்  சுனதபாங்கத்தின்  வெறித்தாக்குதலை சமாளிக்க  முடியாமல்  இறந்து மண்ணில்  வீழ்ந்தனர். நாற்பத்தி இரண்டு அம்புகள் கொண்ட வன்தோளனின்  அம்பறாத்தூணி முப்பது  விநாடிகளில் தீர்ந்தது. அவன் வேகம் கண்டு திகைத்தான்  வன்தோளனின் போர் சேவகன். தொண்டை முழை  கண் உட்காது திறந்த வாய் உதரவிதானம் இவற்றில் மட்டுமே  வன்தோளனின்  அம்புபட்டது. ஒரு அம்பிற்கு ஒரு வீரன் என்ற கணக்கில்  இறந்து கொண்டிருந்தனர். சவில்யத்தின்  வீரர்கள்  அணுகிய போது வில்லினை கீழே வைத்துவிட்டு  கதையை எடுத்துக்  கொண்டான். இரு கைகளிலுமாக மாறி மாறி சுழன்றது அவன் கதை. பேருடல் கொண்டவனான வன்தோளனின் கையிலிருக்கும்  போதே அக்கதை பெரிதாகத் தோன்றியது. ஒரு சுழற்சிக்கு பத்து பேரின்  தலையை சிதறடித்து அவன் கை மீண்டது.

அவன் உடல் முழுக்க குருதியும்  சிதறிய நிணங்களும் வழிந்தன. ஆதிரை  போரிடவில்லை. கவனித்துக்  கொண்டிருந்தாள். மையப்பகுதியை முன்னேற விட்டு இரு புறங்களிலிருந்தும் மையத்தை காப்பதே வன்தோளனின்  வியூகம்  என கணபாரர் புரிந்து கொண்ட போது முக்கூட்டு  நாடுகளின்  மையப்படை சவில்யத்தின்  பிரதான  அரணை நெருங்கியிருந்தது. மையத்தில்  அவர்களை நுழையவிட்டு பக்கவாட்டினை வலுப்படுத்தினார் கணபாரர். இரு பக்கவாட்டுகளும் இணைந்து மையத்தை நெருங்கின. வன்தோளன்  வலப்பக்கவாட்டையும் காமிலர்  இடப்பக்கவாட்டையும் சிதறடித்தனர். ஒற்றைத் தேரில்  தனியே களமிறங்கினாள் ஆதிரை. அவள் எய்த பிறைச் சந்திர அம்புகள்  சிரங்களை கழற்றி எறிந்தன. வன்தோளன்  உத்வேகத்துடன்  போர் புரிந்து கொண்டிருந்த போது காமிலரின்  சிரம் ஒரு பிறைச் சந்திர அம்பால் கழற்றப்பட்டு பல கூர் முனை அம்புகளால் செலுத்தப்பட்டு அவன் தேர்தட்டில்  வந்து விழுந்தது.